‘லஞ்சம் வாங்கினால் செருப்பால் அடியுங்கள்’ என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் நடைபெற்ற சிங்கரேனி நிலக்கரி நிறுவனத்தின் தொழிலாளர்கள் சங்கத் தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி வெற்றி பெற்றதையொட்டி நன்றிதெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று (அக்டோபர் 9) நடைபெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், “சிங்கரேனி நிலக்கரி அமைப்பில் உடல்தகுதி சான்றிதழ் பெற 6 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக விடுப்பு பெறவும், வசிப்பிடங்கள் மாற்றவும் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இதற்கு முன்பு எப்படியோ… ஆனால், இதற்குப் பிறகு யாரேனும் லஞ்சம் கேட்டாலோ அல்லது கொடுத்தாலோ அவர்களைக் காலணியால் அடியுங்கள்.
இதுநாள் வரை தொழிலாளர்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்தாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். புதிய மாநிலம் என்பதால் பல்வேறு பிரச்னைகளை தினந்தோறும் சந்திக்க வேண்டியுள்ளது. அதனால் சிங்கரேனி தொழிலாளர் பிரச்னையில் கவனம் செலுத்த முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.�,