பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் உலக லெவன் அணி, கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தானில் உள்ள கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான் – உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. நேற்று (செப். 13) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது பேட்டிங்கைத் தேர்வுசெய்தார்.
பாகிஸ்தான் அணியின் பகர் சமான், அஹமது ஷேசாத் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினார்கள். பகர் சமான் 13 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து ஷேசாத் உடன் இளம் வீரர் பாபர் ஆசம் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 130 ரன்களை எட்டியபோது ஷேசாத் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஷோயிப் மாலிக் களம் இறங்கினார். பாபர் ஆசம் சிறப்பாக விளையாடி 38 பந்தில் 45 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். ஷோயிப் மாலிக் 23 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. உலக லெவன் அணியில் சாமுவேல் பத்ரி, திசாரா பெரேரா தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர்.
175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உலக லெவன் அணி களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமீம் இக்பால், ஹஷிம் ஆம்லா களமிறங்கினர். இக்பால் 23 ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டிம் பெய்ன் 10 ரன்னில் இமாத் வாசிம் வேகத்தில் போல்டானார். கேப்டன் டு பிளஸி, 20 ரன்களில் அவுட்டானார். உலக லெவன் அணி 14 ஓவர்களில் 106 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்தது. அடுத்துக் களமிறங்கிய திசாரா பெரேரா, ஆம்லாவுடன் ஜோடி சேர்ந்து வெற்றியை உறுதிசெய்தார். உலக லெவன் அணி 19.5 ஓவரின் வெற்றி இலக்கை எட்டியது. ஆம்லா 72 ரன்களுடனும், அதிரடியாக விளையாடிய திசாரா பெரேரா 19 பந்துகளில் 47 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். திசாரா பெரேரா ஐந்து சிக்ஸர்கள் விளாசினார்.
உலக லெவன் அணியின் திசாரா பெரேரா ஆட்டநாயகன் விருது பெற்றார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி, நாளை (செப். 15) நடைபெறுகிறது.
�,”