தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேர் உள்பட 21 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தினகரனுக்கு இருந்துவரும் நிலையில், கரூர் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணனும் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவின் அணிகள் இணைந்த பிறகு தினகரன் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். அதையடுத்து, தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துவந்த 19எம்.எல்.ஏ.க்கள் முதல்வரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதற்கு ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், 18 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
தற்போது அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், திருவாடனை கருணாஸ் ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவருகின்றனர். ஆளுநரிடம் கடிதம் கொடுத்தாலும் இவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆர்.கே.நகரில் சுயேச்சையாக வென்ற தினகரன், எடப்பாடி பழனிசாமி அணியில் தங்கள் ஸ்லீப்பர் செல்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். உரிய நேரத்தில் அவர்கள் வெளியே வருவார்கள் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் முதல்வருக்கு ஆதரவளித்துவந்த கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன், விரைவில் தினகரனைச் சந்தித்து ஆதரவளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூரைச் சேர்ந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும், கீதா மணிவண்ணனுக்கும் இடையில் பிரச்னை இருந்துவந்தது. இது கரூரில் நடைபெற்ற நூற்றாண்டு விழா சமயத்திலேயே எதிரொலித்தது. அமைச்சர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கீதா மணிவண்ணன் முன்வைத்தார். இதுகுறித்து முதல்வரை சந்திக்கவுள்ளேன் என்றும் தெரிவித்திருந்தார். கீதா மணிவண்ணன் தினகரன் அணிக்கு வந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.�,