புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள கிராமத்தில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே சிறுசுனை கிராமத்தில் உள்ள சிதிலமடைந்த கோயில்களில் எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் கள ஆய்வு செய்ய வேண்டும் என்று தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரிரங்கன் மற்றும் பள்ளி மன்ற மாணவர்கள் அயன்ராஜ், ஐஸ்வர்யா, நிகல்யா ஆகியோர் தகவல் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மணிகண்டன் தனது குழுவினருடன் சிறுசுனை கிராமத்தில் உள்ள சிதிலமடைந்த கோயில்களில் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது 13ஆம் நூற்றாண்டில் சோழர்கள் ஆட்சியில் உள்ளூர் நிர்வாகத்திடம் வரி வசூலிக்கும் உரிமை இருந்ததை வெளிப்படுத்தும் வகையில் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மணிகண்டன் கூறுகையில், உள்ளூர் நிர்வாகத்திடம் இருந்த புரவரி உரிமை அரசிறை எனப்படும் காணிக்கடன் நீக்கப்பட்ட ஊர்களில் அவ்வூரின் நன்செய், புன்செய் முதலிய நிலங்களின் விளைச்சல் வருவாய்க்கு ஏற்றவாறு உள்ளூர் நிர்வாக தணிக்கையின் அடிப்படையில், வசூலிக்கப்படும் வரியே புரவரியாக பெறப்பட்டுள்ளது.
இதனை வசூலிக்கும் அதிகாரமும் தணிக்கை செய்யும் அதிகாரமும் பெற்ற அதிகாரி சீகரணத்தார் என அழைக்கப்பட்டுள்ளனர். சோழர் ஆட்சியில் இவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பிரகடனப்படுத்தி, ஊர் குடிமக்களின் நிர்வாக தலைமை இடமாக விளங்கிய கோயிலில் இந்தக் கல்வெட்டு நடப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டின் மூலம் மூலம் சோழர்கால மன்னராட்சி நிர்வாகத்திலேயே வரி வசூலிக்கும் உரிமையை உள்ளூர் நிர்வாகத்திடம் வழங்கி, அந்தந்த கிராமங்களின் உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் ஜனநாயக நடைமுறை இருந்திருப்பது தெரிய வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
�,