நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் முக்கியமான துறைமுகங்கள் சரக்குகளைக் கையாளுவதில் 5.12 சதவிகித வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன.
காண்ட்லா, மும்பை, ஜே.என்.பி.டி., மொர்முகாவ், கொச்சின், நியூ மங்களூர், சென்னை, காமராஜர், வ.உ.சிதம்பரனார், விசாகப்பட்டினம், பாரதீப் மற்றும் கொல்கத்தா ஆகிய 12 துறைமுகங்களும் இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களாகும். இவை இந்த ஆண்டின் ஏப்ரல் – செப்டம்பர் மாதங்களில் மொத்தம் 343.26 மில்லியன் டன் அளவிலான சரக்குகளைக் கையாண்டுள்ளன. இது சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் கையாளப்பட்ட 326.54 மில்லியன் டன் சரக்குகளை விட 5.12 சதவிகிதம் கூடுதலாகும். இந்த விவரங்களை மத்திய கப்பல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சரக்குகளைக் கையாளுவதில் அதிகபட்சமாகக் காமராஜர் துறைமுகம் 19.66 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து கொச்சி துறைமுகம் 11.51 %, பாரதீப் துறைமுகம் 11.12 %, கொல்கத்தா துறைமுகம் 10.07 %, காண்ட்லா துறைமுகம் 10.03 % என்ற அளவில் வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன. அதிக சரக்குகளைக் கையாண்ட துறைமுகமாக காண்ட்லா (58.63 மில்லியன் டன்) உள்ளது. பாரதீப், ஜே.என்.பி.டி., விசாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களும் அதிக சரக்குகளைக் கையாண்டுள்ளன. ஏப்ரல் – செப்டம்பர் மாதங்களில் கையாளப்பட்ட மொத்தச் சரக்குகளில் பெட்ரோலியம் எண்ணெய் மற்றும் உயவுப் பொருட்கள் 33.37 சதவிகிதப் பங்குகளைக் கொண்டிருந்தன.�,