தமிழ்நாட்டில் 2014ஆம் ஆண்டில் இருந்து வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் புதுப்பிக்க தவறியவர்களுக்கு, மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறிய 48 லட்சம் பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில் சிறப்புப் புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் தங்கள் வேலைவாய்ப்பு பதிவைப் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு ஏற்கெனவே மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. இச்சலுகை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து வழங்கப்படும் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் சிறப்புப் புதுப்பித்தல் சலுகை வழங்கி உத்தரவு வெளியிட வேண்டுமென வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் அரசை கேட்டுக் கொண்டது. இதை கவனமுடன் பரிசீலித்த தமிழ்நாடு அரசு நேற்று (டிசம்பர் 2) 2014 முதல் 2016 வரை பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்புப் புதுப்பித்தல் சலுகையும், 2017 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், மேலும் மூன்று மாதங்களுக்கு சிறப்புப் புதுப்பித்தல் சலுகை அளித்து அரசாணை வெளியிட்டது.
அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று மாத காலத்திற்குள் வேலைவாய்ப்பு பதிவைப் புதுப்பிக்க வேண்டும். 2014 ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்பாகப் புதுப்பிக்க தவறியவர்களுக்கு இந்த சலுகை கிடையாது. இந்த அரசாணையை, அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களின் தகவல் பலகையில் மக்களுக்காகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,