சேலம் திட்டம்பட்டியில் மேட்டூர் சரபங்கா உபரிநீர் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேட்டூர் அணையின் வெள்ள உபரிநீரை மேட்டூர், ஓமலூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி ஆகிய தொகுதிகளில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு எடுத்து செல்லும் ரூ.565 கோடி மதிப்பிலான திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 26) தொடங்கி வைத்தார். கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கான பணிகள் முடிவடைந்ததையடுத்து, திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த நீரேற்று திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 12 பொதுப்பணித்துறை ஏரிகள் மற்றும் ஒரு நகராட்சி, 4 பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் குட்டைகள் என மொத்தம் 100 ஏரிகளில் நீர் நிரப்பப்பட உள்ளது. இதன்மூலம், மொத்தம் 4,238 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். 48 கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தி அடைந்து, நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
இத்திட்டத்திற்காக திப்பம்பட்டியில் இருந்து எம்.காளிப்பட்டி ஏரி வரை 12 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணியும், திப்பம்பட்டியில் மிக பெரிய நீரேற்று நிலையங்கள் அமைக்கும் பணியும் முடிவடைந்துள்ளது.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குறுகிய காலத்தில் மேட்டூர் சரபங்கா உபரிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுபோன்று, தமிழகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்படும். தமிழகத்தில், கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு முறை விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இது தேர்தல் வாக்குறுதி அல்ல மக்களின் தேவை என்று முதல்வர் தெரிவித்தார்.
தேர்தல் தேதி வெளியிட போகிற நேரத்தில் மக்களுக்கான அறிவிப்புகளும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
**வினிதா**�,