மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான 63 நாயன்மார்கள் வீதியுலாவின் போது தனிநபர் அர்ச்சனை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 18 ஆம் தேதி முதல் மார்ச் 28ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தேர் திருவிழா மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்கள் திருவீதி உலாவின்போது பக்தர்கள் தனிநபர் அர்ச்சனைக்கு அனுமதி கிடையாது. அதிகார நந்தி காட்சி, வெள்ளி ரிஷப வாகன காட்சி, திருத்தேர் திருவிழா, நாயன்மார்கள் வீதிஉலா மற்றும் திருக்கல்யாண உற்சவம் ஆகியவை யூடியூப் சேனல் மூலம் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது. திருத்தேர் நிலைக்கு வந்தவுடன் தேரில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். 10 வயதிற்கு கீழுள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
திருவிழா முடியும் வரை அன்னதானம், மோர் வழங்குவதை தவிர்க்க வேண்டும். கொரோனா தொற்று காரணமாக பங்குனி திருவிழா அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**வினிதா**
�,