உலகின் மிகவும் மாசடைந்த 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாக சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘ஐகியூஏர்’ (IQAir) நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.
உலகின் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐகியூ ஏர் விஷுவல் நிறுவனம் ‘உலக காற்றின் தர அறிக்கை 2020’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “உலகில் உள்ள நாடுகளில் உள்ள 106 முக்கிய நகரங்களில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ததில், மிகவும் மாசடைந்த நகரங்களின் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. உலகளவில் மிகவும் மாசுபட்ட முதல் 30 நகரங்களில் 22 இடங்கள் இந்தியாவில் உள்ளன. அதிக மாசடைந்த நகரங்களில் சீனாவில் சின்ஜியாங் மற்றும் ஒன்பது இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன” என்று தெரிவித்துள்ளது.
உலகிலேயே மிகவும் மாசடைந்த நகரங்களில் 10ஆவது மாசுபட்ட நகரமாக இந்தியாவின் தலைநகர் டெல்லி திகழ்கிறது. உலகின் இரண்டாவது மாசுபட்ட நகரமாக காசியாபாத் உள்ளது. இதைத் தொடர்ந்து மாசடைந்த நகங்களில் பட்டியலில் காசிதாபாத், புலந்த்சஹார், பிஸ்ராக் ஜலாபூர், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கான்பூர், லக்னௌ, மீரத், ஆக்ரா மற்றும் உத்தரப்பிரேசத்தில் முசாபர் நகர், ராஜஸ்தானில் பிவாரி, பரிதாபாத், ஜிந்த், ஹிஸார், ஃபதேபாத், பந்த்வாரி, குருகிராம், யமுனா நகர், ஹரியானாவில் ரோஹ்டக் மற்றும் தாருஹேரா, பிகாரில் முசாபர்பூர் ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
வாகனப் போக்குவரத்து, உணவுக்காக விறகுகளை எரிப்பது, மின்சார உற்பத்தி, தொழிற்சாலைகள், கட்டுமானம், குப்பைகளை எரித்தல், விவசாயக் கழிவுகளை எரித்தல் போன்றவை காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. அதிக அளவு மாசை வெளியிடுவதில் வாகன போக்குவரத்து முக்கிய அம்சமாக உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் நலப் பணிகளை மேற்கொண்டு வரும், ‘கிரீன்பீஸ் இந்தியா’ என்ற தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அவினாஷ் சன்சால், “கொரோனா பொது முடக்கத்தில் டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது. எனினும் சுற்றுச்சூழல் மாசுபாடு, அதனால் ஏற்படும் பாதிப்புகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. சுற்றுச்சூழலை மாசடைய செய்யும் ஆற்றல் மூலங்களைக் காப்பதில் அரசு நிலையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காற்றில் உள்ள கார்பன் அளவைக் குறைக்கும் வகையில், வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான நடவடிக்கைகளை இயக்கமாக ஊக்குவிக்க வேண்டும். முடிந்தவரை நடந்து செல்வது, சைக்கிள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இது வாழ்நாட்களைக் காப்பதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியமின்மைக்காகச் செலவிடும் பெரும் தொகையினையும் சேமிக்க உதவுகிறது” என்று கூறியுள்ளார்.
“மனித செயல்பாடுகளால் 2021ஆம் ஆண்டில் காற்று மாசுபாடு அதிகரித்து இருப்பதை மீண்டும் காண முடிகிறது. காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு அவசர நடவடிக்கை சாத்தியமானது மற்றும் அவசியமானது என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுவதாக நாங்கள் நம்புகிறோம். இது உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சுகாதார அச்சுறுத்தலாக உள்ளது” என்று ஐகியூஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிராங்க் ஹேம்ஸ் கூறியுள்ளார்.
இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த நகரமும் இடம்பெறவில்லை என்பது ஆறுதலுக்குரிய விஷயமாகும்.
**-ராஜ்**
.�,