|தற்கொலைகளைத் தடுக்க சென்னை ஐஐடி புது முயற்சி!

Published On:

| By Balaji

ஐஐடி சென்னையில் நிகழும் தற்கொலை சம்பவங்களைத் தடுக்க ஸ்ப்ரிங் வகையிலான மின் விசிறிகளை விடுதி அறைகளில் பொருத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கடந்த 9ஆம் தேதி ஐஐடி விடுதி அறையில் கேரளாவைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்டார். கடந்த 10 ஆண்டுகளில் சென்னை ஐஐடியில் 14 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில் கடந்த ஓராண்டில் மட்டும் 5 பேர் தற்கொலை செய்துகொண்டதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஐஐடி சென்னையில் இதுபோன்று நிகழும் தற்கொலைகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்கொலை சம்பவங்களைத் தடுக்க கவுன்சிலிங் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஐஐடி நிர்வாகம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வந்தன. இந்நிலையில் தற்கொலைகளைத் தடுக்க தொழில்நுட்ப முறைகளை ஐஐடி நிர்வாகம் கையிலெடுத்துள்ளது.

அதன்படி இந்த விண்ட்டர் விடுமுறையில் மாணவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வேலையில் அனைத்து விடுதி அறைகளிலும் Fan Bush Protection Device வகையிலான மின் விசிறிகளை மாட்ட ஐஐடி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

ஐஐடி சென்னை மாணவர்கள் கூறுகையில், “Fan Bush Protection Device என்பது ஸ்ப்ரிங் வகையிலான மின் விசிறிகள். இது மின்விசிறியில் உள்ள நடு கம்பிக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும். இதில் சில கிலோ வரையிலான எடையைத் தாண்டினால் மின்விசிறி கீழ் நோக்கி இழுக்கும். அதாவது யாராவது தற்கொலைக்கு முயன்றால் அவர்கள் தரையை நோக்கி இறங்கிவிடுவார்கள்” என்று தெரிவித்துள்ளனர்,

இன்று முதல் டிசம்பர் 20ஆம் தேதிக்குள் அனைத்து விடுதி அறைகளிலும் இந்த வகை மின்விசிறிகள் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஐடியின் இண்டர்னல் மெயில் மீடியாவுக்கு கசிந்ததன் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share