�
ஐரோப்பிய நாடான பிரான்சில் மூன்று புதிய ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு பிரான்சிடமிருந்து 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் போட்டது. அந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக மத்திய அரசிற்கு எதிராக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. அது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
முன்னதாக கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி முதல் ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டு துவக்கத்தில் மேலும் நான்கு விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மூன்று ரஃபேல் ரக போர் விமானங்களை இந்திய அரசிடம் ஒப்படைத்துள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இருக்கும் அந்த விமானங்களில் இந்திய விமானப்படை விமானிகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் பயிற்சி எடுத்துக்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்காக இந்த ரஃபேல் விமானங்கள் நேற்று (நவம்பர்20) இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
�,