iமுதல்வர் பதவி கேட்கும் பன்னீர்செல்வம்

Published On:

| By Balaji

எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று ஒருவருடம் முடிந்த நிலையில், தற்போது பன்னீர்செல்வம் முதல்வர் பதவி கேட்பதாக சட்டமன்ற உறுப்பினர் தினகரன் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு இன்று (பிப்ரவரி 23) தினகரனைச் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், காவிரிப் பிரச்னையில் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. வருங்காலத்திலும் தமிழகத்தின் பிரச்னைகளில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அணுக வேண்டும். அதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணம் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் வரவேற்கிறேன். சட்டமன்றத்தில் சிறப்புக் கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.

தினகரனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்…

**தொடர்ச்சியாக உங்கள் ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனரே?**

எங்களுக்கு 90சதவிகித தொண்டர்களின் ஆதரவு உள்ளது. தற்போது நிர்வாகிகளை நீக்கி எங்கள் அணிக்கு அனுப்பி வைக்கின்றனர். கடைசியாக பன்னீர்செல்வம், பழனிசாமி உள்ளிட்ட 6பேர் மட்டுமே கட்சியில் இருப்பர்.

**கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு உங்களைச் சந்தித்துள்ளாரே?**

பிரபு ஸ்லீப்பர் செல் கிடையாது. பிரபு நீண்ட நாட்களான என்னுடன் தொடர்பில் உள்ளார். தொண்டர்கள் ஆதரவு எங்களுக்கு இல்லை, மக்கள் விரும்பவில்லை என்று கூறித்தான் சசிகலாவையும், என்னையும் கட்சியை விட்டு ஒதுக்குவதாகக் கூறினார்கள். தற்போது 90 சதவிகித தொண்டர்களின் ஆதரவு எங்களிடம்தான் உள்ளது என்பது பிரபுவுக்குத் தெரியும். என்னிடம் அவர் பேசும்போது, நீங்கள் இளைஞர் நீங்களே ஒரு நல்ல முடிவு எடுத்து வாருங்கள் என்று கூறுவேன். தற்போது அவரே முடிவெடுத்து வந்து என்னைச் சந்தித்தார். அவரது தொகுதியில் திட்டங்களை நிறைவேற்ற அவருக்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டது.

பிரபுபோல பல்வேறு எம்.எல்.ஏ.க்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். தொகுதி நலன் கருதி ஏதாவது திட்டங்கள் நிறைவேற்றலாம் என்பதற்காக எடப்பாடி அணியில் சிலர் உள்ளனர். தானாக இந்த ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது பாருங்கள்.

**அணிகள் இணைந்து ஒரு வருடம் துணை முதல்வராக இருங்கள். அதன்பிறகு முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி விட்டுக் கொடுப்பார் என்று ஒப்பந்தம் போட்டுள்ளனர். தற்போது எடப்பாடி முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மறுப்பதால்தான் பன்னீர்செல்வம் பிரச்னை செய்கிறார் என்று தங்க.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளாரே?**

முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்பதற்காகத்தான் பன்னீர்செல்வம் தியானம் இருந்தார். தர்மயுத்தமும் நடத்தினார். துணை முதல்வர் பதவி கிடைத்தது என்பதற்காகவே எடப்பாடி அணியுடன் இணைந்தார். ஒரு வருடம் முடிந்ததால் தற்போது “ஒரு வருடம் முதல்வராக இருந்துவிட்டீர்களே?, முதல்வர் பதவியைக் கொடுங்கள் என்று எடப்பாடி பழனிசாமியிடம் பன்னீர்செல்வம் கேட்கிறார்.

“பிரதமர் என்னிடம் அப்படிக் கூறவில்லை” என்று முதல்வர் பதவியை எடப்பாடி தர மறுக்கவே, பிரதமர் கூறியதால்தான் பதவி ஏற்றேன். தற்போது துணை முதல்வர் பதவியிலிருந்து விலக போகிறேன் என்று மிரட்டும் ரீதியில் பேசியுள்ளார். கோபத்தில், விரக்தியில் உண்மையை ஒத்துக்கொண்டார் பன்னீர்செல்வம். மத்திய பாஜக அரசுதான் பன்னீர்செல்வத்தை தியானம் இருக்க வைத்து, கட்சியை உடைத்து, அவரை முதல்வராக்க முயற்சி செய்தது என்பது அனைவருக்குமே தெரியும். இதனை தற்போது பன்னீர்செல்வம் தன் வாயாலேயே ஒத்துக்கொண்டார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel