மீனவர்களுக்குக் காலநிலை மாற்றங்களை அறிய உதவும் வகையில் சிறப்புக் கருத்தரங்கம் ஒன்று கொச்சியில் நடைபெறுகிறது.
ரிமோட் சென்சிங் இமேஜரி (தொலை உணர்வைக்கொண்டு படமெடுக்கும் தொழில்நுட்பம்) பயன்படுத்தி மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு குறித்து அறிவதற்கான சமூகப் பயன்பாடுகள் குறித்த சர்வதேசக் கருத்தரங்கு ஒன்றை மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (சி.எம்.எஃப்.ஆர்) ஒருங்கிணைத்துள்ளது. இந்தக் கருத்தரங்கம் ஜனவரி 15, 16, 17 ஆகிய மூன்று நாள்கள் கொச்சியில் நடைபெறுகிறது.
இந்தக் கருத்தரங்கம் குறித்து சி.எம்.எஃப்.ஆர் இயக்குநர் கோபால கிருஷ்ணன் கூறுகையில், “புயலால் மீனவர்களுக்கு ஏற்படும் இழப்புகள் மற்றும் பாதிப்பிலிருந்து அவர்களைக் காப்பதற்காக வழிமுறைகளை வலுப்படுத்துதல் குறித்து ஆராய்தலும், மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதலுமே இந்தக் கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும். ஆன்லைன் மற்றும் செல்போன் செயலிகளை உருவாக்குதல் போன்றவை குறித்தும் விவாதிக்கப்படுகிறது. ஓகி போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து மீனவர்களைக் காக்க மீன்பிடித் துறையை அறிவியல் மயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
கேரளாவில் உள்ள பெரும்பான்மை மீனவர்களுக்குப் பருவநிலை மாற்றங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. இந்த மக்களுக்கு வசதிகள் பல கிடைக்கவில்லை. பருவநிலை மாற்றங்கள் குறித்த செல்போன் செயலிகளின் பயன்பாடும் இம்மக்களுக்குக் கிடைக்கவில்லை. மற்ற மாநிலங்களிலும் இதுபோன்றே நிலைமை உள்ளது” என்றார்.
இந்தக் கருத்தரங்கை கேரள மீன்வளத் துறை அமைச்சர் ஜே.மெர்சி குட்டியம்மா தொடங்கிவைக்கிறார். ஓகி புயலால் தமிழக மீனவர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர். தமிழக மீனவர்களும் கடலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த நிலையில் கேரளாவில் இதுபோன்ற ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது போல தமிழக மீனவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், காலநிலை மாற்றங்களை அறியத் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தக் கற்றுக்கொடுக்கவும் ஒரு கருத்தரங்கம் அவசியமானதாகவே உள்ளது.�,