கிச்சன் கீர்த்தனா: ஹைதராபாத் மட்டன் பிரியாணி

Published On:

| By Balaji

ஆண்டு முழுக்க அசைவ விருந்தே சாப்பிட்டாலும் புரட்டாசி மாதம் முடிந்ததும் பிரியாணிக்கு ஏங்குவோர் பலருண்டு. அந்த வகையில் இந்த ஐப்பசி மாதத்தின் ஆரம்பத்தில் எதை சாப்பிடலாம், எங்கே சாப்பிடலாம் என யோசிக்கிறவர்கள், வீட்டிலேயே இந்த ஹைதராபாத் மட்டன் பிரியாணி செய்து அசைவ விருந்து கொண்டாட்டத்தைத் தொடங்கலாம்.

**என்ன தேவை?**

போன்லெஸ் ஆட்டுக்கறி – அரை கிலோ

பாஸ்மதி அரிசி – கால் கிலோ

பெரிய வெங்காயம் – 2 (அரை நிலா வடிவம் போல வெட்டவும்)

பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2

சீரகம் – அரை டீஸ்பூன்

ரோஸ் வாட்டர் – ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

கீரா வாட்டர் – ஒரு டீஸ்பூன் (டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்)

புதினா – அரை கைப்பிடி

கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி

இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

முந்திரி – 50 கிராம் (எண்ணெயில் பொரித்தது)

காஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன் (வெண்ணெயில் வதக்கி மையாக அரைக்கவும்)

கெட்டித் தயிர் – 200 மில்லி

பெங்களூர் தக்காளி – 4 (பொடியாக நறுக்கியது)

கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்

ஃப்ரைடு ஆனியன் – 100 கிராம்

எண்ணெய் – 50 மில்லி

குங்குமப்பூ- சிறிதளவு (2 டேபிள்ஸ்பூன் காய்ச்சிய பாலில் ஊறவைத்துக் கொள்ளவும்)

நெய் – 50 மில்லி

எலுமிச்சைப்பழம் – ஒன்று

உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

ஆட்டுக்கறியை நன்கு கழுவிக் கொள்ளவும். இதில் அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, தயிர், எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் ஊற விடவும். பாஸ்மதி அரிசியை 20 நிமிடங்கள் தண்ணீர் ஊற்றி ஊற விடவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதித்ததும் வடிகட்டிய பாஸ்மதி அரிசி, தலா ஒரு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், உப்பு, சிறிது கொத்தமல்லித்தழை, சிறிது புதினா சேர்த்து முக்கால் பதத்துக்கு வேக விட்டு வடித்து வைக்கவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, மீதம் இருக்கும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் சேர்த்துப் பொரிந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாறியதும், தக்காளி, மீதம் இருக்கும் புதினா, கொத்தமல்லித்தழை, மஞ்சள்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள் மீதமிருக்கும் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு, ஊறிய ஆட்டுக்கறி, உப்பு சேர்த்து 20 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் வதக்கவும். இனி, அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, மட்டன் உள்ள பாத்திரத்தை அதன் மேல் வைத்து வெந்த பாஸ்மதி அரிசியைத் தூவவும். இதன் மேலே குங்குமப்பூ ஊறிய பால், ஃப்ரைடு ஆனியன், ரோஸ் வாட்டர், கீரா வாட்டர், பொரித்த முந்திரி தூவி மூடி போட்டு, அதன் மேல் கனமான ஒரு பொருளைத் தூக்கி வைக்கவும். தீயை முற்றிலும் குறைத்து 20 நிமிடங்கள் `தம்’ போட்டு வேக விடவும். பிறகு, மூடியைத் திறந்து நெய்யை ஊற்றிக் கிளறிப் பரிமாறவும்.

**[நேற்றைய ஸ்பெஷல்: இட்லி… சில சந்தேகங்களும் எளிய தீர்வுகளும்!](https://minnambalam.com/public/2021/10/17/1/doubts-about-idly-and-simple-solutions)**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share