�
ஹோட்டல்களில் 50 சதவிகித இருக்கைகளில்தான் வாடிக்கையாளர்களை அனுமதிக்கப்படுவதால் 5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஹோட்டல் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் நேற்று (ஜனவரி 1) முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி ஹோட்டல்களில் 50 சதவிகித இருக்கைகளில்தான் வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும். எனவே ஹோட்டல்களில் ஒரு மேஜைக்கு இருவர் மட்டுமே உட்கார்ந்து சாப்பிட வைத்தனர். டீக்கடைகளில் கூட்டம் கூடுவதை அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் சென்னை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவி, “கொரோனா பொது முடக்கத்தில் இருந்து இப்போதுதான் மீண்டு வியாபாரம் சூடுபிடித்து வந்தது. அதற்குள் மீண்டும் கட்டுப்பாடு வந்திருப்பது தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
சென்னையைப் பொறுத்தவரை டீக்கடை, சிறிய பெரிய ஹோட்டல்கள், நட்சத்திர ஹோட்டல்கள் என்று சுமார் 10,000 உள்ளன. இந்த ஹோட்டல்களில் வேலை பார்க்கும் தொழிலாளர் உட்பட மறைமுகமாகவும் நேரடியாகவும் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இனி கட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்களில் ஊழியர்களையும் 50 சதவிகிதமாக குறைக்க வேண்டிய கட்டாயம். அவர்கள் வேலை வாய்ப்பை இழப்பார்கள். இது தவிர மறைமுகமாக வேலை வாய்ப்பு பெற்று வருபவர்களிலும் பாதியளவுக்கு வாய்ப்பு குறையும். குறைந்த பட்சம் 5 லட்சம் பேர் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலை வரும்” என்று கவலை தெரிவித்துள்ளார்.
**-ராஜ்**
.�,