டெண்டர் முறைகேடு: அமைச்சர் வேலுமணிக்கு இறுதி கெடு!

Published On:

| By Balaji

சென்னை, கோவை மாநகராட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்குக் கோரப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவருக்கு நெருங்கியவர்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கியதால் அரசுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதுபோன்று ஒப்பந்தப் பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பிலும் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த ஜனவரி 29ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது அரசுத் தரப்பில், “அமைச்சர் வேலுமணிக்கு எதிராக திமுக அளித்த புகாரில் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்த பொதுத் துறை முதன்மை செயலாளர் அனுமதியளித்துள்ளார். அதன்படி அமைச்சருக்கு எதிராக ஆரம்பக்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறையின் முதல் கட்ட விசாரணை தொடர்பான அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு இன்று (அக்டோபர் 18) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. சங்கர் ஆஜராகி முறைகேடு புகார் தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

அதில், இந்த முறைகேடு புகார் தொடர்பாக 349 உள்ளாட்சி டெண்டர்கள் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 41 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 117 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இதுதொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 3 வாரம் அவகாசம் கோரினார்.

இதற்கு, உத்தரவு பிறப்பித்து ஓராண்டாகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி.பொன்னி மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்த விசாரணையைக் கண்காணித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதுபோன்று இதுவரை இந்த வழக்கில் பதில் அளிக்காத அமைச்சர் வேலுமணி பதில் அளிக்க இரண்டு வாரம் இறுதி கெடு விதித்தனர். இந்த வழக்கு நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share