�சிலைகளைப் பாதுகாக்க ஸ்ட்ராங்க் ரூம் கட்டப்பட்டதா?: உயர் நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By Balaji

தமிழ்நாட்டில் கோயில் சிலைகளைப் பாதுகாக்க ஸ்ட்ராங்க் ரூம் கட்டப்பட்டது குறித்து மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள தொன்மையான கோயில்களைப் பாதுகாப்பது தொடர்பாக, 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான, புராதன கோயில்களைப் பாதுகாக்க வேண்டும்.

மாநிலத்தில் உள்ள கோயில்களின் பட்டியலைத் தயாரித்து, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும், கோயில்களில் உள்ள சிலைகள், நகைகள் உள்ளிட்டவற்றை பட்டியலாகத் தயாரிக்க வேண்டும்; கோயில்களில் ஸ்ட்ராங்க் ரூம் அமைத்து, இந்தச் சிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியான ஸ்தபதிகளை நியமிக்க வேண்டும்,

ஓதுவார்கள், அர்ச்சகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவும், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும், அறங்காவலர்களை நியமித்து அவர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், பரம்பரை அறங்காவலர்களை அடையாளம் காண வேண்டும், கோயில்கள் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக வகுத்து வெளியிட வேண்டும், கோயில் நிலங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்குத் தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்பன உள்பட 75 உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்திருந்தனர்.

இந்த வழக்கு மீண்டும் நேற்று (அக்டோபர் 25) நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், 75 உத்தரவுகளில் 38 உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 32 உத்தரவுகள் குறித்து விளக்கம் கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதால், உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து அறிக்கை அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார்.

அதுபோன்று, தொல்லியல் துறை சார்பிலும் அறிக்கை அளிக்க அவகாசம் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து நீதிமன்றத்துக்கு உதவியாக ஆஜரான ரங்கராஜன் நரசிம்மன், உயர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாகவும், உத்தரவின்படி மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்காமல் சீரமைப்புப் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை எனவும், சிலைகளைப் பாதுகாக்க ஸ்ட்ராங்க் ரூம் கட்டப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், கோயில் சிலைகளைப் பாதுகாக்க ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்டப்பட்டதா என அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share