தமிழகத்தில் இந்த வருடம் குளிர்காலம் முடிந்து பிப்ரவரி முதல் வெயில் வாட்டத் தொடங்கியது. மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெப்பம் பதிவானது. பல ஊர்களில் வெப்பநிலை சதமடித்தது. இந்த நிலையில் இலங்கை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மற்றும் வெப்பச்சலனம் காரணமாக குமரி, நெல்லை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று மாலை மதுரை மாவட்டம் டி.குண்ணத்தூர், டி.கல்லுப்பட்டியில் கனமழை பெய்தது.
மதுரையில் கோரிப்பாளையம், தமுக்கம், நெல்பேட்டை, பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பொழிந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த இந்த மழை, மதுரை மண்ணை குளிர்வித்தது. பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆயக்குடி, கணக்கன்பட்டி, கலையமுத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் சாரல் மழை பெய்தது.
கொடைக்கானலில் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், வெள்ளி நீர் வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து, தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. திருநெல்வேலி மாநகரில் நேற்று மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பகலில் வெயில் வாட்டி வதைக்க, மாலையில் பெய்த மழை, மக்களை குளிர்வித்தது. தேனி மாவட்டம் பெரியகுளம், லட்சுமிபுரம், கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை அணை பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை பெய்தது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, வாணியம்பாடியில் கொட்டி தீர்த்த கனமழையால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல், ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு கனமழை பெய்தது. கோடை மழையால், மானாவாரி பயிர் சாகுபடிக்கு தண்ணீர் வசதி கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.