தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (ஜனவரி 17) கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாகச் சுகாதார முன் களப்பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், மக்கள் மத்தியில், பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா என அச்சம் நிலவி வருகிறது. மறுபக்கம், தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய மாநில அரசுகள் கூறி வருகின்றன.
இந்நிலையில் முன்களப் பணியாளர்கள் மற்றும் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்து நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரத் துறை செயலாளர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். திருச்சியில் கொரோனா தடுப்பூசி மையங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் ராதாகிருஷ்ணன், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
மூன்றாம் கட்ட பரிசோதனை முழுமையடையாததால், கோவாக்சின் குறித்து கேள்வி எழுப்பப்படுவதைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் கோவாக்சின் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அவர், விரைவில் கொரோனா தாக்கம் குறையும். தடுப்பூசி, நோய்த் தடுப்புக்கான முக்கியமான மைல்கல் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
**-பிரியா**�,