300 மாணவர்களுடன் இயங்கும் பள்ளிக்கூடத்தை இடித்து, அவ்விடத்தை விற்க முயலும் தனியார் அறக்கட்டளையின் முயற்சிக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர், பாரதி நகரில், கடந்த 53 ஆண்டுகளாகத் தேவி கருமாரி அம்மன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி இயங்கி வருகிறது. பிரமோத் மற்றும் சிவபிரசாத் ஆகியோரால் இந்த பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏழை மற்றும் மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த 300 மாணவர்கள் பயின்று வந்தனர்.
கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால், இந்த பள்ளியை இடித்துவிட்டு வீட்டுமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் அங்கு படித்த மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகி இருப்பதாகவும் கூறி சந்திரசேகர், அப்துல் ரசாக், சுரேகா ஆகிய பெற்றோர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அந்த மனுவில், பள்ளிக் கல்வித் துறையின் ஒப்புதல் பெறாமலும், மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யாமலும் பள்ளி மூடப்பட்டு, இடிக்கப்படுவது தொடர்பாக கடந்த அக்டோபர் 10ஆம் தேதி தமிழகப் பள்ளிக் கல்வித்துறை, மாவட்டக் கல்வி அதிகாரி, மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆகியோரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளியை இடிக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி, பள்ளிக் கட்டிடத்தை இடிக்கவும், இடத்தை விற்பனை செய்யவும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இம்மனுவுக்கு 6 வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக பள்ளிக் கல்வித் துறை, திருவள்ளூர் மாவட்டக் கல்வி அதிகாரி, மாவட்ட ஆட்சியர், பள்ளியின் நிர்வாகிகள் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.
**-பிரியா**�,