நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவரின் தந்தைக்கு ஜாமீன் வழங்க மறுப்புத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அவருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வில் மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, இவ்விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த டேவிஸ் மற்றும் அவருடைய மகன் ராகுல் ஆகியோரும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து வருகின்றனர். ஜாமீன் மனுக்கள் தொடர்பான விசாரணை கடந்த அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற்ற போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மானவர்களான பிரவீன், ராகுல் ஆகியோருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குவதாகவும், மாணவர் உதித் சூர்யாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை இவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்தது.
ஆனால் மாணவர்களின் தந்தைகளுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த நிலையில் அயனாவரத்தைச் சேர்ந்த மாணவரின் தந்தை தனக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று (நவம்பர் 8) விசாரணைக்கு வந்தபோது அக்டோபர் 30ஆம் தேதி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், மீண்டும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்ததால் அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
அதோடு இரண்டாவதாகத் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
�,