mஹஜ் பயணம்: ஏப்ரல் 22 வரை விண்ணப்பிக்கலாம்!

Published On:

| By admin

சவூதி அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஹஜ் பயணத்துக்கு வருகிற 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் தற்போதைய அறிவிப்பின்படி, இந்த ஆண்டில் ஹஜ் பயணம் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடைபெறும். குறிப்பாக, சவூதி அரேபியா அரசாங்கத்தின் சுகாதாரத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தப் பெற்ற 65 வயதுக்குட்பட்டவர்கள், விமானம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பிசிஆர் பரிசோதனையில் நெகடிவ் என உறுதி செய்யப்பட்ட மருத்துவச் சான்று உடையவர்கள், பயணத்தின்போது அனைத்து சுகாதாரம் சம்பந்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தவறாது கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சவூதி அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது என்று மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
வருகிற 30ஆம் தேதி அன்றுள்ளவாறு 65 வயதைக் கடந்தவர்கள் பயணத்துக்குத் தகுதியற்றவர் ஆவார்கள். வருகிற டிசம்பர் மாதம் வரை செல்லத்தக்க வகையில் உள்ள பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள். 65 வயதை பூர்த்தி செய்யாததுடன், தடுப்பூசிகளைச் செலுத்தியவர்கள் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் வருகிற 22ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தற்போது, சவூதி அரசால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க விரும்பாதவர்கள், பயணத்துக்கான விண்ணப்பங்களைத் திரும்பப் பெறலாம் என்று பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.
**-ராஜ்**
.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share