காசோலை மோசடிக்கு உடந்தையாக இருந்த இந்தியன் வங்கிக்கு 15 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு நுகர்வோர் குறைதீர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்காக, வினோத் குமார் என்பவரிடம் 13லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார் சென்னை புழலைச் சேர்ந்த ஜெயினுலாவுதீன். ஆனால், அந்த தொகையை வினோத் குமார் பங்குச் சந்தையில் முதலீடு செய்யவில்லை.இதனால், ஜெயினுலாவுதீன் தான் அளித்த தொகையை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.
இதன்படி, வினோத்குமார் அளித்த நான்கு காசோலைகளை, இந்தியன் வங்கியின் புழல் கிளையில் செலுத்தியுள்ளார் ஜெயினுலாவுதீன். ஆனால் வினோத்குமாரின் கணக்கில் போதிய பணமில்லாததைச் சுட்டிக்காட்டிய வங்கி நிர்வாகம், காசோலைகள் தொலைந்து விட்டதாக கூறி, அவற்றின் நகல்களை ஜெயினுலாவுதீனுக்கு திருப்பி அனுப்பியது.
இதுபற்றி, போலீசாரிடம் புகார் அளித்தார் ஜெயினுலாவுதீன். அவர் தந்த புகாரின் அடிப்படையில் புழல் போலீசார் விசாரணை நடத்தினர். அதில்,வினோத்குமாருடன் கூட்டு சேர்ந்து வங்கி அதிகாரிகள் காசோலை தொலைந்துவிட்டதாக நாடகமாடியது தெரிய வந்தது.
அசல் காசோலைகள் இல்லாததால் சட்டரீதியாக வழக்கை எதிர்கொள்ள முடியாது என்பதை உணர்ந்த ஜெயினுலாவுதீன், வங்கியின் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நுகர்வோர் குறைதீர் மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், லதா மகேஷ்வரி அடங்கிய அமர்வு முன்பு, இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 15) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வங்கித் தரப்பில் பதிலளிக்காததால், ஜெயினுலாவுதீன் செலுத்திய காசோலையின் மதிப்பான 13 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயையும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக 15 லட்ச ரூபாயையும், வழக்குச் செலவாக10,000 ரூபாயையும் சேர்த்து, மொத்தமாக அவருக்கு 28 லட்சத்து 70 ஆயிரத்தை வழங்க உத்தரவிட்டது நுகர்வோர் குறைதீர் மன்றம். 2013 ஆம் ஆண்டிலிருந்து 18 சதவிகித வட்டியுடன் நான்கு வாரங்களில் வழங்க இந்தியன் வங்கிக்கு உத்தரவிட்டது.
�,