�
ஜூலை – செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் மொத்தம் 4.26 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச சந்தை ஆலோசனை நிறுவனமான *ஐடிசி*, இந்தியாவின் ஸ்மார்ட்போன் விற்பனை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூலை – செப்டம்பர் காலாண்டில் மொத்தம் 4.26 கோடி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2017ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த விற்பனை அளவை விட 9.1 சதவிகிதம் கூடுதலாகும். இக்காலாண்டில்தான் சாதாரண வகை மொபைல் போன்களை விட ஸ்மார்ட்போன் சந்தை அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஸ்மார்ட்போன் விற்பனையில் அதிகபட்சமாக சீனாவைச் சேர்ந்த க்ஷியோமி நிறுவனம் மொத்தம் 1.17 கோடி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.
சாம்சங் நிறுவனம் 96 லட்சம் ஸ்மார்ட்போன்களையும், விவோ 45 லட்சம் ஸ்மார்ட்போன்களையும், மைக்ரோமேக்ஸ் 29 லட்சம் ஸ்மார்ட்போன்களையும், ஒப்போ 29 லட்சம் ஸ்மார்ட்போன்களையும் விற்பனை செய்துள்ளன. ஸ்மார்ட்போன் சந்தையில் 27.3 சதவிகிதப் பங்குகளுடன் க்ஷியோமி முதலிடத்தில் இருக்கிறது. 22.6 சதவிகித சந்தைப் பங்குடன் சாம்சங் இரண்டாம் இடத்திலும், 10.5 சதவிகித சந்தைப் பங்குடன் விவோ மூன்றாமிடத்திலும், 6.9 சதவிகித சந்தைப் பங்குடன் மைக்ரோமேக்ஸ் நான்காமிடத்திலும் இருக்கின்றன.
இறக்குமதி வரி உயர்வு மற்றும் டாலர் மதிப்பில் தாக்கம் போன்ற காரணங்களால் வரும் மாதங்களில் ஸ்மார்ட்போன்களின் விலை உயர வாய்ப்பிருப்பதாகவும், அதனால் விற்பனை குறையலாம் எனவும் *ஐடிசி* நிறுவனம் தெரிவித்துள்ளது.�,