2017ஆம் ஆண்டில் தென்னிந்திய மாநிலங்களில் அதிக உற்பத்தி காரணமாக இந்தியாவின் ஒட்டுமொத்த தேயிலை உற்பத்தி வளர்ச்சியடைந்துள்ளது.
2017 டிசம்பர் மாதத்துக்கான தேயிலை உற்பத்தி விவரங்களைத் தேயிலை வாரியம் சமீபத்தில் வெளியிட்டது. அதில், 2016ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் 64 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டிருந்த நிலையில், 2017ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 9.47 சதவிகித உயர்வுடன் மொத்தம் 70.06 மில்லியன் கிலோ அளவிலான தேயிலையை இந்தியா உற்பத்தி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரையில் தேயிலை உற்பத்தி அதிகமாகவே இருந்துவந்தது. ஆனால், செப்டம்பர் மாதத்தில் பருவநிலை உகந்ததாக இல்லாததால் வடஇந்திய மாநிலங்களின் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டது.
எனினும், தென்னிந்திய மாநிலங்களுக்கான உற்பத்தி சிறப்பாகவே இருந்ததால், 2017ஆம் ஆண்டு முழுவதும் மொத்தம் 1,278.83 மில்லியன் கிலோ அளவிலான தேயிலையை இந்தியா உற்பத்தி செய்துள்ளது. இது 2016ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட 1,267.36 மில்லியன் கிலோ அளவிலான தேயிலையை விட 0.91 சதவிகிதம் (11.47 மில்லியன் கிலோ) அதிகமாகும். வட இந்திய மாநிலங்களின் தேயிலை உற்பத்தி அளவு 1,054.51 மில்லியன் கிலோவிலிருந்து 1,046.42 மில்லியன் கிலோவாகக் குறைந்துள்ளது. அதேநேரம், தென்னிந்திய மாநிலங்களின் தேயிலை உற்பத்தி 212.85 மில்லியன் கிலோவிலிருந்து 232 மில்லியன் கிலோவாக உயர்ந்துள்ளது.
இந்திய மாநிலங்களிலேயே அதிகபட்சமாக அஸ்ஸாம் 653.33 மில்லியன் கிலோ தேயிலையை உற்பத்தி செய்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் 367.98 மில்லியன் கிலோ, தமிழகத்தில் 164.70 மில்லியன் கிலோ மற்றும் கேரளாவில் 62.33 மில்லியன் கிலோ என்றளவில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.�,