�
‘தீவிரவாத ஒழிப்புக்காக அமெரிக்கா கொடுத்த பில்லியன் டாலர்களுக்கு, பாகிஸ்தான் வெறும் பொய்களை மட்டுமே திரும்பக் கொடுத்துள்ளது’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டாலருக்கு மேல் அமெரிக்கா நிதியுதவி அளித்துவந்தது. ஆனால், தீவிரவாத அமைப்புகள்மீது பாகிஸ்தான் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக பாகிஸ்தான் அரசுக்கு இந்த ஆண்டு வழங்க இருந்த ரூ.1,650 கோடி நிதியை நிறுத்திவைப்பது குறித்து கடந்த சில வாரங்களாகவே அமெரிக்க அரசு பரிசீலனை செய்துவந்தது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று (ஜனவரி 1) தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா 33 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. அதற்குப் பதிலாக பாகிஸ்தான் வெறும் பொய்களை மட்டுமே திரும்பக் கொடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக இஸ்லாமாபாத் இருக்கிறது” என்று பாகிஸ்தானைக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் பாகிஸ்தானுக்கு இந்த ஆண்டு வழங்க இருந்த ரூ.1,650 கோடி நிதியையும் நிறுத்தி வைப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு (2017) ஆகஸ்ட் மாதத்தில் ஆப்கன் தீவிரவாதக் குழுக்களுக்கும் தாலிபான் தீவிரவாத அமைப்புக்கும் ஆதரவளித்து வருவதாக அமெரிக்கா, பாகிஸ்தானைக் கடுமையாக எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.�,