மனிதர்கள் ஒன்றுகூடி மகிழ்வதற்காக உருவாக்கப்பட்டவைதான் பெரும்பாலான திருவிழாக்களும் பண்டிகைகளும். அந்த வகையில் பெண்கள் நட்பு பாராட்ட வாய்ப்பாக அமைந்த விழாவாகவும் நவராத்திரி கருதப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான படையலிட்டு அதை மற்றவர்களுக்கு அளிப்பது நவராத்திரியின் சிறப்பு. நவராத்திரி நாட்களில் கொலுவைத்தால்தான் பலகாரங்களைச் செய்ய வேண்டும் என்பதில்லை; அனைவரும் நாளுக்கு ஒன்றாகச் சமைக்கலாம். அவற்றில் ஒன்று இந்த சுகியன்.
**என்ன தேவை?**
கடலைப் பருப்பு, பொடித்த வெல்லம் – தலா அரை கப்
தேங்காய்த் துருவல் – அரை கப்
ஏலக்காய்ப் பொடி – 1 சிட்டிகை
எண்ணெய் – தேவைக்கு
நெய் – சிறிதளவு
பச்சரிசி – 1 கப்
முழு உளுந்து – கால் கப்
**எப்படிச் செய்வது?**
அரிசியையும் உளுந்தையும் அரை மணிநேரம் ஊறவைக்கவும். கடலைப் பருப்பைக் கால் மணி நேரம் ஊறவைத்து, மெத்தென்று வேகவைத்துக்கொள்ளவும். வெந்த கடலைப் பருப்பைத் தனியாக எடுத்து அதனுடன் தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலக்காய்ப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றுவிட்டு எடுத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிது நெய்விட்டு சூடானதும் இந்தப் பூரணத்தைப்போட்டுக் கெட்டியாகக் கிளறி எடுத்து வைத்துக்கொள்ளவும். ஊறிய பச்சரிசியையும் உளுந்தையும் சிறிது நீர்விட்டு அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் கடலைப் பருப்புப் பூரணத்தைச் சிறு உருண்டைகளாக உருட்டி மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.
[நேற்றைய ரெசிப்பி: காராமணி வடை!](https://minnambalam.com/k/2019/10/02/12)�,