மக்களை பீதியில் ஆழ்த்தாதீர்கள்: டிடிவி தினகரன்

Published On:

| By Balaji

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் சென்னையில், நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன அந்தவகையில் தற்போது சென்னையில் பரிசோதனைக்கு வந்தாலே அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மாநகராட்சி ஆணையரின் இந்த திடீர் அறிவிப்பு, மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆளுக்கொன்றாக சொல்லி அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதை ஆட்சியாளர்கள் நிறுத்திவிட்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

கொரோனா பரிசோதனைக்குச் சென்றாலே சோதனை செய்து கொள்பவரும், அவரது குடும்பத்தினரும் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் கூறியிருக்கிறார். இதுவரை பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களை மட்டுமே இத்தகைய முறையில் தனிமைப்படுத்தி வந்தனர்.

தற்போதைய அறிவிப்பின் படி சோதனையில் நோய் இல்லை என்று வந்தாலும் குடும்பத்தோடு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் சொல்கிறாரா? இதைக் கேட்ட பிறகு நோய் இருக்கலாமோ எனச் சந்தேகப்படுபவர்கள் கூட தாங்களாகச் சென்று எப்படி சோதனை செய்துகொள்வார்கள்? அரசின் வசம் கரோனா பரிசோதனைக் கருவிகள் (PCR KIT) குறைவாக இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வரும் நிலையில், பரிசோதனை எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியா இது ?” என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், “முதல்வர், சுகாதார அமைச்சர், முதல்வரின் சிறப்பு அங்கீகாரம் பெற்ற ‘தினசரி பேட்டி’ அமைச்சர், தலைமைச்செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், கொரோனா சிறப்பு அதிகாரி, கொரோனா சிறப்பு ஒருங்கிணைப்பாளர், சிறப்புக் கண்காணிப்பு செய்ய தனித்தனியாக அமைச்சர்கள் , மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள், இவர்களோடு சேர்த்து மாநகராட்சி ஆணையர் என இத்தனை பேரும் கொரோனா தடுப்புப் பணிகளைப் பற்றி ஆளுக்கொன்றாக பேசியும், செயல்பட்டும், அவரவர் இஷ்டப்படி அறிவிப்புகளை வெளியிட்டும் கொரோனாவை விட மோசமாக மக்களை இம்சித்து வருகிறார்கள்.

திறமையும் அனுபவமும் வாய்ந்த அமைச்சர் அல்லது அதிகாரி தலைமையில், துடிப்பான அதிகாரிகள் குழுவினர் ஒற்றை உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, ஒருங்கிணைந்து செயல்பட்டால்தானே மிக மோசமான பேரிடரை எதிர்கொள்ள முடியும்?. இந்த அடிப்படை கூட புரியாமல் ‘அவருக்கு நெருக்கமானவர்: இவருக்கு வேண்டப்பட்டவர்’ என மக்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் அமைச்சர்களும், அதிகாரிகளும் தனித்தனி ஆவர்த்தனங்கள் செய்து கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார் டிடிவி தினகரன்.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share