பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய்,மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகை பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. பின்பு, பரிசு தொகுப்பில் கரும்பும் சேர்க்கப்பட்டது.
இதுதொடர்பாக ரேஷன்கடை ஊழியர்கள் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.
ரேஷன்கடை பணியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், ”ரேஷன் கடைகளுக்கு வழக்கமான அரிசி, சர்க்கரை போன்றவையே சரியான எடையில் அனுப்புவதில்லை. கொரோனா நிவாரணமாக அரசு, கடந்த ஜூன் மாதம் 14 வகை மளிகை பொருட்களை வழங்கியது. அதில் துணி பையும் இடம்பெற்றிருந்தது.
ஆனால், மளிகை தொகுப்பில் இடம்பெற்றிருந்த பொருட்கள் தனித்தனியே கடைகளுக்கு அனுப்பப்பட்டன. அவற்றை எடுத்து, ஒவ்வொரு அட்டைதாரர்களுக்கும் துணி பையில் போட்டு கொடுக்க வேண்டியதால் ஊழியர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல், பல பொருட்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. இதனால், ஊழியர்களுக்கும், மக்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இதே பிரச்சினை, பொங்கல் பரிசு வழங்கும் போது ஏற்படக்கூடாது என்பதால், பரிசு தொகுப்பில் உள்ள பொருட்கள் அனைத்தையும், நுகர்பொருள் வாணிப கழகமே துணி பையில் போட்டு, தைத்து, அட்டைத்தாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கடைகளுக்கு அனுப்ப வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,