அரசுப் பள்ளிகளில் ஜூன் 13ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை!

Published On:

| By admin

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை, வரும் ஜூன் 13ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும், கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 13ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. அதன்படி, 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும், வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளன.
இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் 1, 6, 9, 11ஆம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை வரும் ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அதேபோல, இடைப்பட்ட வகுப்புகளான 2, 3, 4, 7, 8, 10ம் வகுப்பு ஆகியவற்றுக்கும் ஜூன் 13ஆம் தேதியே மணவர் சேர்க்கை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் கோடை விடுமுறையின்போதே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகே புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தாமதமாகவே தொடங்குவது பெற்றோர் பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share