அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மத அமைப்பிலான தேர்தல்களில் போட்டியிடக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சகாயராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்தார். அதில், தூத்துக்குடி நாசரேத் சி.எஸ்.ஐ. பேராயத்தின் கீழ் 21 அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகள், 70 நடுநிலை பள்ளிகள், 241 தொடக்கப் பள்ளிகள், சில கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு அரசு மூலமாகவே ஊதியம் வழங்கப்படுகிறது.
இவர்களில் பலர் சி.எஸ்.ஐ, சி.எஸ்.ஐ பேராய நிர்வாகக் குழு தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்று நிர்வாகக் குழுவில் இடம்பெறுகின்றனர். அரசு ஊதியம்பெறும் ஆசிரியர்கள் மத அமைப்புகளின் நிர்வாகத்தில் இருப்பது சரியாக இருக்காது.
மதுரை ராமநாதபுரம் பேராலயம், தென்னிந்திய திருச்சபை கூட்டமைப்பின் கீழ் நடத்தப்படும் தேர்தலில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தேவாலய தேர்தலில் போட்டியிடுவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதுபோன்று, தூத்துக்குடி நாசரேத் சி.எஸ்.ஐ. பேராயம் கீழ் இயங்கும் பள்ளிகளில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றம் ஆணையரை அமைத்து முறையாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நேற்று(ஜூன் 18) நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,
மதுரை – ராமநாதபுரம் சி.எஸ்.ஐ பேராயத் தேர்தலில், அரசு ஊதியம் பெறும் பள்ளி ஆசிரியர்கள் போட்டியிடக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், தூத்துக்குடி-நாசரேத் சி.எஸ்.ஐ. பேராயத் தேர்தலிலும், ஆசிரியர்கள் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மத அமைப்பிலான தேர்தல்களில் போட்டியிடக்கூடாது என பள்ளிக்கல்விதுறை சுற்றிக்கை அனுப்ப உத்தரவிட்டனர்.
தொடர்ந்து மனுதாரரின் கோரிக்கை குறித்து பள்ளிக் கல்வி துறை செயலாளர், சி.எஸ்.ஐ. அமைப்பின் செயலாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
**-வினிதா**
�,”