rடாஸ்மாக் கடை அமைத்தல்: நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Balaji

டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கான தூர நிர்ணய விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியைச் சேர்ந்த பாண்டி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் திருச்சுழி தாலுகா சேதுபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பகுதியில் தொடக்கப் பள்ளியும், அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகின்றது. அரசு உயர்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை, கிராம வங்கிகள் ,கூட்டுறவு வங்கி போன்றவை இலுப்பையூர் கிராமத்தில் அமைந்துள்ளது. சேதுபுரம் சாலையை கடந்துதான் மக்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

இந்த சூழ்நிலையில், டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் மிக சிரமமாக இருக்கும். இந்தப் பகுதியில் மக்கள் எதிர்ப்பை தாண்டி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், டாஸ்மாக் கடையை மூட நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் மீண்டும் டாஸ்மாக் கடையை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதனால், சேதுபுரம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு இன்று(அக்டோபர் 25) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி துரைசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கான தூர நிர்ணய விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை பெரும்பாலான உள்ளூர்வாசிகள் டாஸ்மாக் கடையை திறக்க விரும்பவில்லை. ஆகவே மனுதாரர் இதுகுறித்து புதிதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு தாக்கல் செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் நேரடியாகவோ அல்லது தனது நேரடி பிரதிநிதி மூலமாகவும் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று தூரக் கட்டுப்பாட்டு விதிகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள்,

உள்ளூர் பகுதி மக்களின் கருத்துகள் குறித்தும் கவனத்தில் கொண்டு, நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் . டாஸ்மாக் கடை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எடுக்கும் முடிவு குறித்து நீதிமன்றத்திற்கு மூன்று மாதங்களில் தெரிவிக்க வேண்டும். தூர கட்டுப்பாட்டு விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share