~சிவசங்கர் பாபா வழக்கு : 3 ஆசிரியைகளிடம் விசாரணை!

Published On:

| By Balaji

சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகாரில், அவருக்கு உடந்தையாக இருந்த 3 ஆசிரியைகள் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு போக்சோ வழக்குகளில் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவை மூன்றாவது வழக்கில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையாக சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக செயல்பட்ட ஆசிரியைகளை விசாரிக்க சம்மன் அளித்த நிலையில்,ஐந்து பேரும் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார், மீண்டும் சம்மன் அளிக்கப்படும், அதற்கும் ஆஜராகவில்லையென்றால் அடுத்தது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை சம்மன் அனுப்பப்பட்ட ஐந்து ஆசிரியைகளில் மூன்று பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கங்களை தெரிவித்தனர்.

சிவசங்கர் பாபா மீது மாணவிகள் தெரிவித்த குற்றச்சாட்டு பற்றியும் இதற்கு ஆசிரியைகள் எவ்வாறு உடந்தையாக இருந்தனர் என்று மாணவிகள் தெரிவித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணையை நடத்தி பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வரவேண்டும் என போலீசார் உத்தரவிட்டனர். அதற்கு, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். காயத்ரி, பிரவீனா ஆகிய இரண்டு ஆசிரியைகள் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளனர்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share