நடிகர் ரஜினிகாந்த் சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மத்திய அரசின் சார்பில் கர்நாடக மாநிலம் மைசூரு அருகேயுள்ள பந்திப்பூரில் இன்று (ஜனவரி 27) வன பாதுகாப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த், தனது மகளுடன் இன்று காலை சென்னையிலிருந்து ட்ரூ ஜெட் விமானத்தில் மைசூர் சென்றார். இவர்களுடன் மொத்தம் 48 பேர் விமானத்தில் பயணித்தனர்.
விமானம் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு சிறிது தூரம் சென்றபோது விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார் விமானி. அனுமதி கிடைத்ததும், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பின்னர் பொறியாளர்கள் விரைந்து சென்று இயந்திரக் கோளாறை சரிசெய்தனர். பின்னர் விமானம் இரண்டு மணிநேரம் தாமதமாக புறப்பட்டு மைசூரு சென்றடைந்தது. உரிய நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. எந்திர கோளாறு காரணமாக விமானத்திலேயே ரஜினி அமர்ந்திருந்தார். சக பயணிகள் அனைவரும் ரஜினி அருகே சென்று கைகுலுக்குவதும், போட்டோ எடுப்பதுமாக இருந்தனர். ரஜினி எல்லோரிடமும் பேசி மகிழந்தார்.�,