முரசொலி நில விவகாரத்தில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முரசொலி நாளேட்டின் அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்ட அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில் சொல்ல இதனை முன்வைத்து திமுக-பாமக இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆணையத்தில் உரிய ஆதாரங்களை சமர்ப்பிப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து, அதனை தனது இறுதி பதில் எனவும் குறிப்பிட்டார்.
இதனிடையே முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமெனவும், அவ்வாறு பஞ்சமி நிலத்தில் அமைந்திருந்தால் முரசொலி அலுவலகத்திற்கு சீல் வைக்க வேண்டுமெனவும் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன், “முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருந்தால் அதனை உடனே அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அந்த நிலம் ரூ.5 கோடி மதிப்பு எனவும், அந்த நிலத்தை தமிழக அரசிடம் திருப்பி கொடுக்கும் பட்சத்தில் திமுகவிற்கு ரூ.5 கோடி இழப்பு என்றால் அந்த பணத்தை நான் அல்லது பாஜக தரத் தயார்” என்று தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக இன்று (நவம்பர் 18) ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நாடாளுமன்றத்திற்கே போகக்கூடாது என்று கன்னியாகுமரி மக்களால் நிராகரித்து தூக்கியெறியப்பட்ட பொன். ராதாகிருஷ்ணன் கற்பனையான பஞ்சமி நிலக் குற்றச்சாட்டை வைப்பது வெட்கக்கேடானது. ஓய்வு அரசியலில் ஒய்யாரமாக இருக்கும் பொன். ராதாகிருஷ்ணன் துணிச்சல் இருந்தால் ஆதாரங்களை வெளியிட வேண்டும். அதற்கு வக்கில்லை என்றால் வேறு வழிகளில் தனது கட்சிக்குள் விரும்பும் தலைவர் பதவியை பெற முயற்சிக்க வேண்டும்” என்று விமர்சித்தார்.
பொன். ராதாகிருஷ்ணனுக்கு தைரியம் இருந்தால் மத்திய அரசின் தவறான கொள்கைகளால் இன்றைக்கு தாறுமாறாக நிலைகுலைந்து நிற்கும் பொருளாதாரத்தைப் பற்றியும், வேலையிழப்பு குறித்தும் பேசட்டும் என்று தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, “கற்பனைக்கு எட்டாத குற்றச்சாட்டை, கதைக்கு உதவாத புகாரை பத்திரிகைகள் தலைப்புச் செய்தி போடுகிறது என்பதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ஊழல் அதிமுகவுடன் இருக்கும் பழக்க தோஷத்தால் பொய்களை உண்மைகளாக்க புலம்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் பஞ்சமி நிலம் குறித்த ஆதாரத்தை வெளியிடுங்கள். அதற்கு நாம் லாயக்குப்பட மாட்டோம் என்று நீங்கள் கருதினால், கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி – அரசியலிலும் ஓய்வு எடுங்கள். அதை விடுத்து வீணாக திமுக பற்றி பிதற்றினால் அரசியல் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்து விடலாம் என்று கணக்குப் போட்டு – திமுகவை வீண் வம்புக்கு இழுக்காதீர்கள்” என்று பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.�,