�டெல்லி, கர்நாடகா, புதுச்சேரி: அடுத்து தமிழகத்திலும் பொது முடக்கம் நீக்கப்படுமா?

Published On:

| By Balaji

மார்ச் 22 ஆம் தேதி முதல் இப்போது வரை நீடித்துவரும் பொது முடக்கத்தை நீக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுதும் மார்ச் 22 மக்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு முன்னும் பின்னும் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (ஆகஸ்டு 25) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று அச்சம் காரணமாக, கடந்த 5 மாதங்களாக பொது முடக்கம் நடைமுறையில் இருக்கின்றது. வருமானத்திற்கு வழியின்றி பட்டினி கிடக்க நேர்ந்தபோதிலும், அரசுக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.

கடந்த ஐந்து மாதங்களில் அரசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே உதவித்தொகையாக அளித்தது. நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கியது. ஆனால், அவை போதுமானது இல்லை. அதேவேளையில், டாஸ்மாக் கடைகளைத் திறந்து விட்டது. அதனால் ஏழை எளிய அடித்தட்டுப் பொதுமக்கள் குடும்பங்களின் அமைதி பறிபோய்விட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் பெருகி வருகின்றன.

மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்தை நிறுத்தி, இ-பாஸ் வாங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது ஆனால் கடந்த ஐந்து மாதங்களில் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த 47 லட்சம் பேருக்கு வழங்கவில்லை. இதனால் பொதுமக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை” என்று குறிப்பிட்டுள்ள வைகோ தொடர்ந்து,

“குழந்தைகளுக்கு இணைய வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியது. ஆனால் அவர்களுக்கு அந்தப் பாடத்தை படிப்பதற்கான கணினி, திறன் அலைபேசி வசதிகள் இல்லை. பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் அரசு திறன் அலைபேசிகளை வழங்கிக் கொண்டு இருக்கின்றது.

அப்படி, தமிழக அரசும் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அரசிடம் அதற்கான நிதி இல்லை கடந்த ஐந்து மாதங்களில் தமிழக அரசின் நிதி நிலை சீரழிந்து விட்டது அரசு திவால் ஆகும் நிலையில் இருக்கின்றது. கர்நாடக அரசு அனைத்துத் தடைகளையும் விலக்கிக் கொண்டு விட்டது. நடுவண் அரசு கேட்டுக் கொண்டபடி புதுச்சேரி மாநில அரசு தனது எல்லைகளைத் திறந்து விட்டது.

தமிழ்நாட்டை விட மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்லியில், ஒரு மாதத்திற்கு முன்பே அனைத்துத் தடைகளும் விலக்கப்பட்டு விட்டன. இப்போது அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது. எனவே, அனைத்துத் தரப்பு மக்களின் நலன் கருதி, தமிழக அரசு, தமிழ்நாட்டுக்கு உள்ளே போக்குவரத்து முடக்கத்தை நீக்க வேண்டும்; அரசுப் பேருந்துகளை கட்டுப்பாடுகளுடன் இயக்க வேண்டும்; செப்டம்பர் 1 முதல் தொடரிகள் ஓடுவதற்கும் ஆவன செய்ய வேண்டும்; அயல்நாடுகளில் இருந்து வான் ஊர்திகள் வருவதற்கும் வகை செய்ய வேண்டும். இதற்கெல்லாம் மேலாக சமூக விலகலைக் கடைபிடித்து பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறேன்” என்று வைகோ கூறியுள்ளார்,.

தமிழகத்தில் ஊரடங்கு பொது முடக்கத்தை முற்றிலும் விலக்குமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைக்கத் தொடங்கியிருப்பது குறிப்பிடத் தக்கது. வரும் 29 ஆம் தேதி முதல்வர் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கும் நிலையில் வைகோ இக்கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share