Zகாஞ்சிபுரம் ஆட்சியருக்கு கொரோனா!

Published On:

| By Balaji

கோவை ஆட்சியரைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 15) காஞ்சிபுரம் ஆட்சியருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களைத் தவிர, முன்னிலை பணியாளர்களான, மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. உடல்சோர்வு மற்றும் சளி ஆகிய அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கோவை ஆட்சியரைத் தொடர்ந்து தற்போது காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஆட்சியர் பொன்னையாவுக்கு மாவட்டத்திலுள்ள ஒரு காய்ச்சல் முகாமில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முடிவு நேற்று வெளிவந்த நிலையில் அவருக்குத் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் வீட்டிலேயே மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின்படி அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் முதன்முறையாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று ஒரே நாளில் 4,496 பேர் என மொத்தமாக இதுவரை 1,51,820 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று, 68 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 2,167 ஆக அதிகரித்துள்ளது.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share