இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படுவதை கண்டித்து பிப்ரவரி 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக ராமேஸ்வர மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை அரசால் தமிழக மீனவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 105 படகுகள், பிப்ரவரி 7ஆம் தேதி முதல் ஏலம் விடப்படும் என்று இலங்கை அரசு அறிவித்தது.
இதுகுறித்து அறிவிப்பு வெளியானவுடனே, தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், மத்திய, மாநில அரசுகள் எப்படியும் இலங்கை அரசிடம் பேசி, படகு ஏலம் விடப்படுவது கைவிடப்படும் என்று மீனவர்கள் நினைத்திருந்தனர்.
ஆனால் இலங்கை அரசு சொன்னபடி, இன்று(பிப்ரவரி 7) யாழ்ப்பாணம் காரைநகரில் உள்ள 65 படகுகளை ஏலம் விடும் பணியை தொடங்கியது. இதையடுத்து, பிப்ரவரி 8ஆம் தேதி காங்கேசன்துறையில் உள்ள 5 படகுகள், பிப்ரவரி 9 தேதி கிராஞ்சியில் உள்ள 24 படகுகள், பிப்ரவரி 10ஆம் தேதி தலைமன்னாரில் உள்ள 9 படகுகள்,மற்றும் பிப்ரவரி 11ஆம் தேதி கற்பிட்டியில் உள்ள 2 படகுகள் அடுத்தடுத்த நாட்களில் ஏலம் விடப்படுகின்றன.
இது தமிழக மீனவர்களிடையே கடும் அதிருப்தி ஏற்படுத்திய நிலையில் இலங்கை அரசை கண்டித்து இன்று ராமேஸ்வரம் விசைபடகு மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது, தமிழக மீனவர்களின் சொத்தான விசைப்படகையும், நாட்டு படகையும் அரசு மீட்டுக் கொடுக்க வேண்டும். தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கச்சத் தீவில் மீன்பிடிக்க அனுமதி வாங்கி தர வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் நடவடிக்கையை இலங்கை அரசு கைவிட தவறும் பட்சத்தில் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி மத்திய அரசு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
**-வினிதா**