சாத்தூர் அருகேயுள்ள ஏழாயிரம்பண்ணை என்ற இடத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூவர் உயிரிழந்தனர், நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை தரும் பட்டாசு தொழில், சில நேரங்களில் மக்களின் உயிரை காவு வாங்கி விடுகிறது. பட்டாசு தயாரிக்கும் தொழில் அதிகமாக நடைபெறும் விருதுநகர், சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகளில் அடிக்கடி வெடி விபத்து ஏற்படுவதும், உயிரிழப்பு எற்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. இந்தாண்டின் தொடக்கத்திலே ஜனவரி 1ஆம் தேதியன்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்குள்ளே மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில் விஜய குலத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் சோலை என்ற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று நடத்தி வந்தார். இந்த பட்டாசு தொழிற்சாலை நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இன்று(ஜனவரி 5) வழக்கம்போல் ஆலையில் 7 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, பட்டாசு தயாரிப்பதற்காக மருந்து கலக்கும் பணியின்போது ஏற்பட்ட உராய்வினால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. விபத்தில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கட்டட இடிப்பாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்தவர்களில் ஐந்து பேர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையிலும், இரண்டு பேர் சாத்தூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் செந்தில்குமார், காசி மற்றும் பட்டாசு ஆலை உரிமையாளர் கருப்பசாமி ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படி தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
**-வினிதா**
�,