தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சம்பா நெல் அறுவடைப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
கஜா புயலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரத்தநாடும் ஒன்று. இந்தப் பகுதியில் தென்னை, நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக சம்பா நெல் அதிகளவில் இப்பகுதியில் பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் இதன் அறுவடை கடந்த 10 நாட்களாக முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்காகத் தஞ்சாவூர் மாவட்டத்தில் 60 கொள்முதல் நிலையங்களைத் தமிழ்நாடு சிவில் வழங்கல் கழகம் திறந்துள்ளது. மொத்தமாக இம்மாவட்டத்தில் இயங்கும் 109 நேரடிக் கொள்முதல் மையங்களில் 90,000 டன் சம்பா நெல் கொள்முதல் செய்யப்படும் என்று எதிர்பார்ப்பதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த 109 நேரடிக் கொள்முதல் மையங்களில் விவசாயிகளின் தேவைக்காகக் கடந்த ஆண்டு அக்டோபரில் 79 மையங்கள் திறக்கப்பட்டன. இம்மாவட்டத்தின் நெல் பயிரிடப்படும் மற்ற முக்கியப் பகுதிகளான கும்பகோணம், பாபநாசத்தில் நெல் அறுவடை ஜனவரி மூன்றாவது வாரத்தில் தொடங்குகிறது. தற்போது ஒவ்வொரு மையத்திலும் 1,000 டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மேற்கொண்டு கொள்முதல் நிலையங்கள் தேவைப்பட்டாலும் திறக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். அதேபோல, திருச்சி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.�,