திருச்சியில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டில் பங்கேற்ற கவிஞர் கனிமொழி எம்.பி. திருப்பதி ஏழுமலையானுக்குச் சக்தியிருந்தால், அக்கோவில் உண்டியலுக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஏன் என்று கேள்வி கேட்டிருந்தார். இந்நிலையில் கனிமொழி மீது இந்துக்கள் மனதை புண்படுத்தியதாக வழக்குத் தொடுக்கப் போவதாக இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்திருந்தன.
இதற்கு பதில் தரும் வகையில் அம்மாநாட்டை ஏற்பாடு செய்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
“கடத்தப்பட்டக் கடவுள்களைக் கண்டுபிடிக்க போலீசில் தனிப் பிரிவு ஏன்? இந்து கடவுள்கள்தானே கடத்தப்படுகின்ற கடவுள்கள்? (மற்ற மதக் கடவுள் நம்பிக்கைகளையும் பகுத்தறி வாளர்களோ, நாத்திகர்களோ ஏற்பதே இல்லை என்பதும் உண்மை – முக்கியம்) கோவிலுக்கு உள்ளே இருக்கும்போது அவை கடவுள்கள், களவு போன அந்தக் கடவுள்களைக் கண்டுபிடித்து மீட்டுக்கொண்டு வந்த பிறகு, சிலைகளா? அதற்கென்றே தனி சிலைத் திருட்டு தடுப்பு – கண்டுபிடிப்புப் பிரிவு போலீஸ் என்று உள்ளதே! அதற்கெல்லாம் புண்படாத உங்கள் மெல்லிய(?) மனது, கனிமொழியின் இந்தப் பேச்சைக் கேட்டு புண்பட்டு விட்டதோ!
அடிக்கடி பெரியார் திடலுக்கு வந்து அங்கு நடைபெறும் சிந்தனையைத் தூண்டும் உரைகளைக் கேளுங்கள் புண் சரியாகி பண்பட்ட மனிதர்களாகி விடுவீர் நீவிர்!
வைரமுத்து என்றாலும் சரி, கனிமொழியாக இருந்தாலும் சரி – அபவாதம் பேசி அடியாள் தன்மையுடன் மிரட்டலாம் என்று நினைத்தால் தந்தை பெரியார் பிறந்த மண் அதனைக் கம்பீரமாகவே எதிர் கொள்ளும். வழக்கு வந்தால் சந்திக்கத் தயார், நூற்றுக்கணக்கில் வழக்குரைஞர்கள் பலரும் வாதாட வரிசையில் அணிவகுப்பார்கள்’’ என்று தெரிவித்திருக்கிறார் கி.வீரமணி.�,