எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, ஈரான் நாட்டு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது, படகுகளைப் பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இதனால், தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தங்கள் வாழ்வாதாரத்துக்காக ராமநாதபுர மாவட்ட மீனவர்கள் பலர் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மீன்பிடி கூலித் தொழிலாளி வேலைக்குச் சென்று வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த பூமி, பால்குமார், சதீஸ், துரைமுருகன், அலெக்ஸ் பாண்டியன் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மில்டன் ஆகிய 6 பேரும் துபாய்க்கு மீன்பிடி ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களாகச் சென்றிருந்தனர்.
இவர்கள் துபாய் நாட்டுக் கடல் பகுதியில் படகில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இவர்களைச் சுற்றி வளைத்தனர் ஈரான் கடற்படையினர். தங்களது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, அவர்களைக் கைது செய்தனர். கடந்த சனிக்கிழமையன்று (செப்டம்பர் 1) அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்த தகவல், இன்றுதான் சம்பந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்குத் தெரிய வந்துள்ளது.
�,