தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு ரத்து செய்யப்பட்டதையடுத்து, 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு புதிய ஏற்பாட்டை செய்துள்ளது தமிழக பள்ளிக் கல்வித் துறை.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அதனால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர் பொதுத்தேர்வு காரணமாக 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதம் 19 ஆம் தேதியும், 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
பொதுத் தேர்வுக்கு மிக குறுகிய காலம் இருந்த நிலையில், 9, 10, 11 மாணவர்களுக்கு தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி என சட்டசபையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கான அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டது.
கடந்த ஆண்டும் கொரோனா காரணமாக மாணவர்கள் பொதுத்தேர்வுகளின்றி தேர்ச்சி வழங்கபட்டதால், இந்த ஆண்டும் தேர்ச்சி வழங்கப்படுவது மாணவர்களின் கற்றல் திறனை பாதிக்கும். மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டதால் அடிப்படை வாசிப்பு திறன் இன்றி உயர்கல்விக்கு செல்கின்றனர் என ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில்தான் 11ஆம் வகுப்பில் வேண்டிய பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், இந்தாண்டு தேர்வின்றி தேர்ச்சி அறிவித்ததால், எதன் அடிப்படையில் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க முடியும் என்ற குழப்பம் மாணவர்களிடையே இருந்தது.
இந்நிலையில், சிறப்பு நுழைவுத் தேர்வு மூலம் 11ஆம் வகுப்பு மாணவர்கள் சேரக்கையை நடத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டு பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் மதிப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு மாணவர்கள் 11ஆம் வகுப்பில் சேருவதற்கு மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி என்று மட்டுமே குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை பரீசிலித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**வினிதா**
�,