மாணவர் சேர்க்கையின்போது பெற்றோர் – ஆசிரியர் கழக நிதியாக 50 ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதில், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, ஜூன் 14ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த முயற்சியால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “மாணவர் சேர்க்கையின்போது பெற்றோர் – ஆசிரியர் கழக நிதியாக 50 ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது. மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது.
மேலும், 5 வயது குழந்தைகள் அனைவரும் பள்ளிகளில் சேர்ந்திருப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். அதுபோன்று, தங்களது பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவரும் ஒன்பதாம் வகுப்பைத் தொடர்கிறார்களா என்பதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,”