சுருக்குமடி வலை: தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு!

Published On:

| By Balaji

சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக உரிய முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீன் பிடிப்பதற்கு பல்வேறு வகையான வலைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் சுருக்குமடி வலை. சுருக்கு பை போன்று வட்ட வடிவில் இறுகிக்கொண்டே செல்லுவதால் இதற்கு சுருக்குமடி வலை என பெயர். இந்த வலையின் விலை மிக அதிகம். கடலின் அடியில் 500 மீட்டர் வரை கீழே செல்லும். பெரிய சுருக்கு மடிவலையை வீசினால் எல்லா மீன்களும் மாட்டிக்கொள்ளும். அதன்மூலம் அதிக லாபம் கிடைக்கும். சாதாரண வலை பயன்படுத்தும் நாட்டுப்படகு மற்றும் பாரம்பரிய படகு மீனவர்களுக்கு குறைந்த லாபமே கிடைக்கும். இதனால் இருதரப்பு மீனவர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படும். சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடையை நீக்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அறிவழகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தொடர்ந்திருந்தார். அதில், கடந்த மார்ச் 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சுருக்குமடி வலைகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டது. சுருக்குமடி வலைகளை பயன்படுத்த மீனவர்களுக்கு உரிமை உள்ளது என 2020ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி ஒன்றிய அரசு உத்தரவிட்டது.

ஆனால், தமிழ்நாட்டில் இந்த உத்தரவு பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு மனு அளித்தும் எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று(ஆகஸ்ட் 31) நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் மனுவுக்கு மீன்வளத்துறை உதவி இயக்குனர் அனுப்பிய பதில் கடிதத்தில் சுருக்குமடி வலைகளை கொண்டு மீன்பிடிப்பது தொடர்பாக அரசு உரிய முடிவு எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை மனுவை 4 வாரத்திற்குள் பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share