சேலம் கோயில் யானையைக் கருணைக் கொலை செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
விலங்குகள் நல ஆர்வலர் முரளீதரன் என்பவர், ”சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜேஸ்வரி என்ற பெண் யானை காலில் வலி ஏற்பட்டுக் கடந்த ஒரு மாதமாகப் படுத்த படுக்கையாக உள்ளது. தொடர்ந்து படுத்துக் கிடப்பதால் அந்த யானைக்குப் புண் ஏற்பட்டுள்ளது. அந்த யானையை மருத்துவரீதியாகக் குணப்படுத்த முடியாது. ஆனால் ஜேசிபி எந்திரம் மூலம் நிற்கவைக்க முயற்சி செய்வதால் மேலும் யானைக்குக் காயம் ஏற்படும்” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் யானையைக் கருணை கொலை செய்ய உத்தரவிடவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் யானையைக் கருணைக் கொலை செய்யமுடியுமா என்பது குறித்துப் பதிலளிக்க இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 16) மீண்டும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நோய்வாய்ப்பட்ட சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரியை கருணைக் கொலை செய்ய வேண்டும் எனவும், யானையைப் பரிசோதித்து 48 மணி நேரத்தில் அறிக்கை அளிக்க சேலம் கால்நடை மருத்துவருக்கு உத்தரவிட்டு அறிக்கை பெற்ற பின் விதிகளைப் பின்பற்றி கருணைக் கொலை செய்ய வேண்டும் எனவும், தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.�,