மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தின் நிவாரணத்திற்காக வருமான வரித் துறை அதிகாரிகள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்க முடிவுசெய்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அம்மாநிலமே பெருத்த சேதத்துக்கு ஆளாகியுள்ளது. வெள்ள பாதிப்பாலும் நிலச் சரிவாலும் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், லட்சக் கணக்கான மக்கள் தங்களது உறைவிடத்தையும், உடைமைகளையும் இழந்து மிகுந்த சோகத்தில் உள்ளனர். கேரள மக்களைக் காக்கவும், பாதிப்புகளை மீண்டும் புனரமைக்கவும் இந்தியா முழுவதும் பலர் உதவி வருகின்றனர். கேரளத்துக்கு வெளிநாடுகளிலிருந்தும் உதவிகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்திய கிரிக்கெட் அணியினரும் தங்களது பங்குக்கு இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஊதியத்தைக் நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளனர்.
அந்த வரிசையில் வருமான வரித் துறை அதிகாரிகள் தங்களது ஒரு நாள் ஊதியத்தைக் கேரள மக்களின் நிவாரணத்துக்காக வழங்க முன்வந்துள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு அறிக்கையில், “இந்திய வருவாய் சேவைகள் கூட்டமைப்பு தனது ஆழ்ந்த வருத்தங்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்குத் தெரிவித்துக் கொள்கிறது. எங்களது கூட்டமைப்பு சார்பாக அனைத்து அதிகாரிகளும் குறைந்தது தங்களது ஒரு நாள் சம்பளத்தை கேரள நிவாரணத்துக்கு வழங்குகின்றனர். கேரள மக்கள் இந்தத் துன்பத்திலிருந்து விரைவில் மீண்டு வருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இதர சேவைகள் கூட்டமைப்பு அதிகாரிகளும் தங்களது பங்களிப்பை கேரளாவுக்கு வழங்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,