கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்கு பதிலாக உலர் உணவுப் பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது எந்தெந்த பொருட்கள் எந்தெந்த அளவுகளில் எத்தனை நாட்களுக்கு வழங்க வேண்டும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜனவரி 20ஆம் தேதி முதல் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் உயர்நிலைப்பள்ளி மாணவ மற்றும் மாணவியர் உள்பட அனைத்து குழந்தைகளும் பயன்பெறும் வகையில் பள்ளி வேலை நாள்களை கணக்கிட்டு 15 நாள்களுக்கு ஒருமுறை உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை , அரிசி ஒரு நாளுக்கு 100 கிராம் வீதம் ஒரு கிலோ 100 கிராமும், பருப்பு ஒரு நாளுக்கு 54 கிராம் வீதம் அரை கிலோவும், கொண்டை கடலை அல்லது பாசி பருப்பு வாரம் ஒருமுறை 20 கிராம் அல்லது 40 கிராம் வீதமும், முட்டை ஒரு நாளுக்கு 1 முட்டை வீதம்11 முட்டைகள் வழங்கப்படும்.
அதேபோல், உயர் தொடக்க அல்லது உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரிசி ஒரு நாளுக்கான அளவு 150 கிராம் வீதம் 1.650கி.கி, பருப்பு ஒரு நாளுக்கான அளவு 81கிராம் வீதம் 890 கிராமும், கொண்டை கடலை அல்லது பாசி பருப்பு வாரம் ஒருமுறை 20 கிராம் அல்லது 40 கிராமும், முட்டை நாளொன்றுக்கு ஒன்று வீதம்11 முட்டைகளும் வழங்கப்படும்.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு 10.01.2022 முதல் அங்கன்வாடி பணியாளர்களால் சத்துணவு திட்டப் பயனாளி குழந்தைகளுக்கு அவர்தம் வீடுகளுக்கு நேரடியாக சென்று அரிசி, பருப்பு மற்றும் முட்டை உலர் உணவுப் பொருட்களாகவும், 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், 11 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி செல்லா வளரிளம் பெண்கள், கருவுற்ற பெண்கள் மற்றும் பாலுட்டும் தாய்மார்களுக்கு சத்துமாவு அவர்தம் இல்லத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் உலர் உணவாக தொடர்ந்து வழங்கப்படும்.
இந்த அறிவிப்பின் மூலம் 9 மற்றும் 10 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருள்கள் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே வழங்கப்பட்டதை விட பள்ளி சத்துணவு பயனாளிகளுக்கு தற்போது கூடுதலாக பருப்பு, முட்டை மற்றும் கொண்டைக் கடலை அல்லது பாசி பயிறும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 42 லட்சத்து 13 ஆயிரத்து 617 பள்ளி மாணவர்கள் பயனடைவார்கள். இந்த உலர் ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள் வழங்கும் திட்டம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியாளர்களால் கண்காணிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
**-வினிதா**
�,