தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தடுப்பதற்கு வெறும் அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது, இந்த விஷயத்தில் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை தடுப்பது தொடர்பான உத்தரவை அமல்படுத்த கோரிய வழக்கு இன்று(மார்ச் 25) நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் காணொலிக் காட்சி மூலமாக ஆஜராகி, மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது தொடர்பாக அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருவதாகவும், இதுவரை ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வெறும் அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது. இந்த விஷயத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
பின்னர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கும் வணிக நிறுவனங்களை மூடி சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
அப்போது, நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு வழங்கும் நிலையங்கள் முறையாக செயல்படவில்லை என மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் பழுதாகி உள்ள 33 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என தெரிவித்தனர்.
இதனையடுத்து, ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து குடிநீர் வழங்கும் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் வழங்கும் இடங்களையும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
**-வினிதா**