iதிமுக: அதிகாலை பட்டுவாடா ஆயிரம் ரூபாய்!

Published On:

| By Balaji

இடைத் தேர்தலை எதிர்கொள்ளும் விக்ரவாண்டி தொகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பிரச்சாரம் செய்து முடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று அக்டோபர் 14 அதிகாலை முதல் திமுக சார்பில் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் பணப்பட்டுவாடா தொடங்கிவிட்டது.

தொகுதிக்குள் பணம் வினியோகம் செய்யும் பொறுப்பை மாவட்ட செயலாளரான பொன்முடியிடம் தராமல் எ.வ.வேலுவிடம் ஸ்டாலின் கொடுத்துள்ளார் என்று கடந்த அக்டோபர் 12 மின்னம்பலம் மதியம் ஒரு மணி பதிப்பில் ஸ்டாலின் யார் பக்கம் என்ற செய்தியில் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் ஸ்டாலின் பிரச்சாரம் முடிந்த நிலையில் நேற்று இரவே தொகுதியில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் திமுகவின் பணம் பொறுப்பான ஆட்கள் மூலம் லேண்ட் ஆகிவிட்டது.

வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு லோக்கல் ஒன்றிய திமுக வினர் இருவர், வெளியூர் திமுகவினர் இருவர், மத்திய மாவட்ட திமுக சார்பில் இருவர் என ஆறு நபர்களை கொண்டு பணப்பட்டுவாடா குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழு நேற்று இரவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பூத்களில் உள்ள வாக்காளர் பட்டியலை சரிபார்த்து தயாராக வைத்துக் கொண்டது. இன்று அதிகாலை ஐந்து மணி முதல் திமுகவுக்கு வாக்களிக்கும் வாக்காளர்கள், திமுக சார்பாக பொதுமக்கள் என தேர்ந்தெடுக்கப்பட்ட 80 சதவீதம் பேருக்கு பணப் பட்டுவாடா தொடங்கிவிட்டது. இன்று இரவுக்குள் பணப் பட்டுவாடாவை முடித்துவிடுவோம் என்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.

அதிமுக எவ்வளவு கொடுக்கப் போகிறது என்பதோ, எப்போது கொடுக்கப் போகிறது என்பதோ தெரியாத நிலையில் திமுக இப்படி முந்தி கொண்டதன் காரணம் என்ன என பணப்பட்டுவாடா குழுவில் இருந்த சிலரிடம் பேசினோம்.

“பொதுவாகவே கிராமங்களில் முதலில் யார் பணம் கொடுத்தார்கள் என்றுதான் பார்க்கிறார்கள். இரண்டாவதாக கொடுத்தவர்கள் அதிகமாக கொடுத்திருந்தால் கூட முதலில்

தங்களை நாடி வந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் யோசிக்கிறார்கள். இன்னொரு முக்கியமான விஷயம் ஒரு வாரம் அவகாசம் இருக்கும் போதே பணப்பட்டுவாடா செய்வதன் மூலம், பணம் கொடுக்க விடுபட்டிருந்தால் அவர்களைக் கண்டறிந்து இன்னும் சில நாட்களில் கொடுத்து விடலாம்.

கடைசி நேரத்தில் பணம் கொடுப்பதன் மூலம் விடுபட்ட வாக்காளர்களுக்கும் தரமுடியவில்லை. நிர்வாகிகளிடமும் கணக்கும் கேட்க முடியாது. வெளியூர் நிர்வாகிகள் கொடுத்ததுதான் கணக்கு. இந்த மூன்று காரணங்களால் திமுக பணப்பட்டுவாடா வில் முந்திக் கொண்டது” என்கிறார்கள்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share